மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் வரை இரட்டை அகல ரெயில்பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் தெரிவித்தார்.
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
மதுரை கோட்டத்தில் மணப்பாறை-திருச்சி இடையே நடந்து வரும் 36 கி.மீ. தொலைவுக்கான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து வருகிற 28,29-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடக்க உள்ளது. அன்றைய தினமே அந்த பாதையில் ரெயில்கள் இயக்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
...
more... மணப்பாறை-திண்டுக்கல் இடையேயான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடிந்து விடும். அதேபோல, பொள்ளாச்சி-பாலக்காடு இடையேயான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் கடந்த மாதம் முடிந்து விட்டன. அந்த பாதையில் ராமேசுவரத்தில் இருந்து மங்களூர் வரை ரெயில்கள் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, மும்பை செல்லும் ரெயில்களை அந்த பாதையில் இயக்கி பயணிகளின் நேரத்தை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்தும் ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி, மதுரை- வாஞ்சி மணியாச்சி-நெல்லை, நெல்லை- நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் இரட்டை அகல ரெயில்பாதை அமைப்பதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளது.
அதனை தொடர்ந்து முதற்கட்ட பணிகள் குறித்து கடந்த வாரம் மதுரை வந்த ரெயில்வே திட்டங்கள் நிறுவனத்தின்(ஆர்.வி.என்.எல்.) பொதுமேலாளரிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 4 வருடங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.